கோயில் வழிபாட்டில் செய்ய வேண்டியது

"ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்றார் ஒளவையார். என்னதான் வீட்டில் தனியாக பூஜை அறை அமைத்து தெய்வப் படங்களை வைத்து வழிபட்டாலும், கோயிலுக்குச் சென்று நம் பிரார்த்தனைகளை முறையிட்டு வழிபட்ட திருப்தி கிடைக்காது. ஆனால், இறைவன் குடிகொண்டிருக்கும் கோயிலுக்குச் சென்று வழிபடும்போது, அதற்கென உள்ள சில நியதிகளையும் பின்பற்ற வேண்டும் என்கிறதாம் சாஸ்திரங்கள்.

அந்த நடைமுறைகளைத்தான் நமது முன்னோர்கள் காலம்காலமாகப் பின்பற்றி வருகிறார்கள். எனவே தெய்வ அருள் பூரணமாகக் கிடைக்க செய்ய வேண்டியவை...
1.கோயிலுக்குச் செல்லும் முன்னர் குளித்து விட்டு தூய ஆடைகளை உடுத்திச் செல்ல வேண்டும்.
2.கோயில் அருகில் சென்றதும், கோயிலுக்கு முன்பாக நின்று கோபுரத்தை நோக்கி வணங்க வேண்டும்.
3.பசுமடம் உள்ள கோயிலுக்குச் சென்றால், வாழைப்பழம் அல்லது அகத்திக்கீரை கொண்டு சென்று பசுவுக்குக் கொடுப்பது சிறப்பு.
4.சிவன் கோயில் என்றால் 3, 5, 7 என எண்ணிக்கையில் வலம் வர வேண்டும்.
5.சிவன் கோயில் என்றால், நந்தி பகவானை வழிபட்ட பின்னரே, சிவபெருமானை வழிபட வேண்டும். அதேபோல நந்திக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் செல்லக் கூடாது.
6.விநாயகரை இரு கைகளால், தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டு வழிபட வேண்டும்.
7.கோயிலின் உள்ளே உள்ள மற்ற சந்நிதிகளைக் காட்டிலும், கொடி மரத்தின் அருகில் மட்டுமே விழுந்து கும்பிட வேண்டும்.
8.அந்தந்த சந்நிதிக்கு ஏற்ற ஸ்துதி பாடல்கள் பாடி வழிபடுவது சிறப்பு. மந்திரங்கள் மற்றும் துதி பாடல் தெரியாதவர்கள், அந்தச் சந்நிதியில் உள்ள கடவுளின் பெயரைச் சொல்லி ஓம் (சிவ) போற்றி என்று கூறலாம்.
9.கோயிலில் தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்தது.
10.கோயிலில் விபூதியோ குங்குமமோ கொடுத்தால், அவற்றை வலது கையால் மட்டுமே வாங்க வேண்டும்.
11.கோயிலில் இருந்து திரும்பும்போதும் மீண்டும் கோபுர தரிசனம் செய்ய வேண்டும்.
12.கோயிலில் இருந்து நேராக நம் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.

Divine Talking Clock