ஆடி முடிந்து ஆவணி பிறந்து விட்டது. ஆவணியில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். ஆவணி மாதத்தை சிங்க மாதம் என்றும் வேங்கை மாதம் என்றும் சித்தர்கள் கூறுவர். மாதங்களுக்கு எல்லாம் அரசன் என்று பொருள்.
சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர். சஞ்சலமாக இருந்த அர்ஜுனனுக்கு, ஆத்மபலத்தை அளிக்க கீதையை உபதேசம் செய்ய கிருஷ்ணர் இம்மாதம் பிறந்தார்.
மகாவிஷ்ணு என்ற நெடிய உயர்ந்த தெய்வம், வாமனன் என்ற குட்டையான வடிவு கொண்டு பூமியை தன் காலடியால் அளக்க அவதரித்தது இந்த ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில்தான்.
ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் "ஞாயிறு என்றாலே "சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும்.
ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர். சிலருக்கு இயற்கையாகவே ஆன்மிக அறிவு அமையும். தேகநலனுக்காக சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் சிறப்பு.
மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. கருங்குருவிக்கு உபதேசம் செய்தது, நாரைக்கு முக்தி கொடுத்தது, தருமிக்கு பொற்கிழி அளித்தது, புட்டுக்காக மண் சுமந்தது, நரிகளைப் பரிகளாக்கியது, வளையல் விற்ற லீலை... என, மதுரை மண்ணில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்கள் இந்த விழாவில் இடம்பெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, சொக்கநாதருக்குப் பட்டாபிஷேகம் செய்யப்படும்.
வடமொழியில் சிரவண நட்சத்திரம் என்றழைக்கப்படும் திருவோணத்தில் பௌர்ணமி வருவதால் சிரவண மாதம், ஆவணி மாதம் ஆகியது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திருவோண நாளை விரத நாளாக அனுசரிக்கின்றனர்.
நாடெங்கிலும் ஆவணி மூலத் திருவிழா கொண்டாடப்பட்டாலும் மதுரை பிட்டுத் திருவிழா குறிப்பிடத்தக்க ஒன்று. ஏழைக் கிழவியான வந்தி என்பவளுக்காக ஈசன் மனிதர்களோடு மனிதராய்க் கலந்து பிட்டுக்காக மண் சுமந்து, கூலி வாங்கி, பிரம்படியும் பெற்றுக் கொண்ட பெருநாள், ஆவணி மூல நாள்.